/indian-express-tamil/media/media_files/nvL7brsExZ6ebROYs4vf.jpg)
Prajwal Revanna Arrested
பாலியல் வன்கொடுமை வழக்குகளை எதிர்கொண்ட ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தடைந்த பின்னர் கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
வியாழன் பிற்பகல் இன்டர்போலில் இருந்து அவர் வந்த தகவல் கிடைத்ததும், கர்நாடக காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), பெங்களூரு காவல்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் ஆகியோர் எம்.பி.யை விமான நிலையத்திலேயே கைது செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர். அவரை சிறப்பு புலனாய்வுக் குழு காவலில் எடுத்தது.
ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களித்து ஒரு நாள் கழித்து - ஏப்ரல் 27 அன்று அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் கோரிக்கையை அடுத்து இம்மாத தொடக்கத்தில் பிரஜ்வாலுக்கு இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.49 மணிக்கு பிரஜ்வல் பயணித்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. இது ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் இருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 12.05 மணிக்கு (பிற்பகல் 3.35 மணி IST) வியாழன் அன்று புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது என்று இன்டர்போல் கர்நாடக அதிகாரிகளுக்கு அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாசன் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடும் பிரஜ்வல், இந்த வார தொடக்கத்தில் ஒரு வீடியோ செய்தியில், மே 31 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகப் போவதாகக் கூறியிருந்தார்.
புதன்கிழமை, அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார், இது வெள்ளிக்கிழமை பிற்பகல் விசாரணையை ஒத்திவைத்தது.
பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் பொதுவில் வெளியானதை அடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஏப்ரல் 28 அன்று கர்நாடக அரசால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
எம்.பி.க்கு எதிரான மூன்று கற்பழிப்பு வழக்குகளை இந்த குழு விசாரித்து வருகிறது.
குரல் மாதிரி
பிரஜ்வாலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று எஃப்.ஐ.ஆர்.களில், பாதிக்கப்பட்ட மூவரின் வாக்குமூலமே முதன்மையான ஆதாரமாக இருந்தாலும், வீடியோக்கள் எடுக்கப்பட்ட இடங்களைச் சரிபார்த்தல், எம்பிக்கு எதிரான அவர்களின் வழக்கை நிறுவ வீடியோவில் உள்ளவர்களின் உடல் பண்புகள் மற்றும் ஒலிகளை பகுப்பாய்வு செய்தல் உட்பட உட்பட இரண்டாம் நிலை ஆதாரத்தையும் சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் செல்போன் டவர் இருப்பிடத் தகவல் போன்ற தொழில்நுட்ப தரவுகளையும் குழு ஆய்வு செய்து வருகிறது.
புதன்கிழமை, ஹாசனில் உள்ள பிரஜ்வலின் எம்பி குடியிருப்பில் இருந்து படுக்கைகள், கட்டில்கள் மற்றும் ஃபர்னிச்சர்களை இந்த குழு கைப்பற்றியது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவரது குரல் மாதிரிகள் மற்றும் டிஎன்ஏ உள்ளிட்ட பிற பண்புக்கூறுகள் சேகரிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
Read in English: Rape-accused Karnataka MP Prajwal Revanna arrives in Bengaluru from Munich, arrested
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.