தற்போதைய அரசியல் சூழல் குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் எழுதியுள்ள "இருவுதெல்லவ பிட்டு" புத்தகம் நாளை வெளியாகிறது.
தமிழ், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்த சர்சைகளில் அதிகம் பேசப்பட்டு வருகிறார். பிஜேபி அரசை குறி வைத்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் அவர், ஜனநாயக இந்தியாவில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை என்ற நோக்கில், பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து நேரடியான விமர்சனங்களை தெரிவித்தார்.
இதன் காரணமாகவே, பிரகாஷ் ராஜுக்கு மத்திய அரசிடம் இருந்து பலவகையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றனர். இவை எதையுமே கண்டுக்கொள்ளாத அவர், நான் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரானவன் என்று பல பேட்டிகளில் பகிரங்கமாக கூறி வருகிறார். இந்நிலையில், இவரின் தாய் மொழியான கன்னடத்தில் "இருவுதெல்லவ பிட்டு" என்ற பெயரில் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
,
இந்த புத்தகத்தில், தற்போதைய அரசியல் குறித்து, சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்துள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இந்த புத்தகம் நாளை (பிப்ரவரி 4) வெளியாகிறது. இதுக்குறித்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பிரகாஷ் ராஜ் புத்தகம் எழுதுவது குறித்து ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வரும், பிஜேபி தலைவர்கள் புத்தகம் வெளியான பிறகு, எதிர்ப்பு தெரிவித்தால் அதுப் பற்றி தான் அஞ்ச போவதில்லை என்றும் பிரகாஷ் ராஜ் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.