முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா விருதுகளை வழங்கினார். துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரணாப் முகர்ஜியுடன் மறைந்த அஸ்ஸாம் பாடகர் பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி கடந்த 2012-2017 ஆண்டுகளில் குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தார். நாட்டின் மேன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரணாப்புக்கு இந்த விருது வழங்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.