Prashant Bhushan Tamil News: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஒரு ரூபாய் அடையாள அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஒரு ரூபாயை பிரசாந்த் பூஷனிடம் அவரது வழக்கறிஞரான ராஜீவ் தவான் வழங்கினார். நீதிமன்றத்தில் உரிய மரியாதையுடன் ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்த இருப்பதாக பிரசாந்த் பூஷன் கூறினார்.
பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர். பொதுநல வழக்குகள் பலவற்றை தொடுத்தும், ஆஜராகியும் வருபவர். ஜூன் 28, 29-ம் தேதிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷன் வெளியிட்ட இரு பதிவுகள் சர்ச்சை ஆனது.
நீதித்துறையை விமர்சிப்பதாகக் கூறி பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முன்னெடுத்தது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
ஆகஸ்ட் 14-ம் தேதி இந்த வழக்கில், ‘பூஷன் குற்றவாளி’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பது குறித்தான விவாதத்தை ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தேதியை ஆகஸ்ட் 25-க்கு தள்ளி வைத்தது.
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘பூஷன் பொதுநல வழக்குகள் மூலமாக நல்ல பணிகளை செய்திருக்கிறார். அவரை தண்டிக்க வேண்டாம்’ என ஆகஸ்ட் 25-ம் தேதி கேட்டுக்கொண்டார். பூஷன் தனது பதிவுகளுக்கு வருத்தம் தெரிவிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனது முழு நம்பிக்கை அடிப்படையில் வெளியிட்ட ட்வீட்களுக்கு வருத்தம் தெரிவிப்பது, உண்மையானதாக இருக்காது என பூஷன் குறிப்பிட்டார்.
பூஷனின் இந்த பதிலுக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அதைத் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் வருத்தம் தெரிவிப்பது இல்லை என்பதில் பூஷன் உறுதி காட்டினார். அதைத் தொடர்ந்தே இந்த வழக்கு தீர்ப்பு ஆகஸ்ட் 31-க்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பான லைவ் செய்திகளை இங்கு காணலாம்.
Live Blog
Prashant Bhushan Judgement Tamil Live: பூஷன், தனது நம்பிக்கை அடிப்படையில் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பது சரியாக இருக்காது என வாதிட்டார். எனவே பூஷனுக்கு தண்டனை என்பது உறுதி செய்யப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ரூ.1 அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அவருடைய வழக்கறிஞர் ராஜிவ் தவான் ரூ.1 அளித்தார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்புக்குப் பிறகு, என்னுடைய வழக்கறிஞரும் எனக்கு மூத்த வழக்கறிஞருமான ராஜிவ் தவான் உடனடியாக ரூ.1 பங்களிப்பு அளித்தார். அதை நான் பெருமையாக ஏற்றுக்கொண்டேன்” என்று புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
My lawyer & senior colleague Rajiv Dhavan contributed 1 Re immediately after the contempt judgement today which I gratefully accepted pic.twitter.com/vVXmzPe4ss
— Prashant Bhushan (@pbhushan1) August 31, 2020
கோர்ட் அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு ரூ. 1 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த அபராதத்தொகையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் 3 மாத சிறைவாசம் அனுபவிப்பதோடு மட்டுமல்லாது வழக்கறிஞர் பணியை 3 ஆண்டுகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தண்டனை விவரம் அறிவிக்க இருக்கிறது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தண்டனையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூஷன், தனது நம்பிக்கை அடிப்படையில் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பது சரியாக இருக்காது என வாதிட்டார். ‘வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துகளை மீடியா மூலமாகக் கூறலாம். ஆனால் நீதிபதிகள் அப்படிச் செய்ய முடியாது. தங்கள் கருத்துகளை தீர்ப்பில் மட்டுமே கூற முடியும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர். பூஷன், தனது நம்பிக்கை அடிப்படையில் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பது சரியாக இருக்காது என வாதிட்டார். எனவே பூஷனுக்கு தண்டனை என்பது உறுதி செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights