பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகள் : வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தீபாவளி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாட கேதர்நாத் சென்றுள்ளார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட இருக்கிறார் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சில முக்கிய அமைச்சர்கள் உட்பட பலர் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை இன்று கொண்டாட உள்ளனர். கேதர்நாத் சென்ற நரேந்திர மோடி அங்கிருக்கும் புனித தலத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களின் மத்தியில் நரேந்திர மோடி பேசிய போது ”நீங்கள் இந்த நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றினால் தான் 125 கோடி இந்தியர்களின் கனவு மற்றும் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறினார்.
அங்குள்ள வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நரேந்திர மோடி.
ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான நலத்திட்டங்கள் பற்றி பேசிய மோடி
ஐடிபிபியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விரிவாக பேசியுள்ளார். இந்திய அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புப் படையினை உறுதிப்படுத்தும் முனைப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நலத்திட்டங்கள் பற்றியும், சர்வதேச அளவில் இந்திய ராணுவம் எப்படி நன்மதிப்பினை பெற்றுவருகிறது என்பது தொடர்பாகவும் பேசியதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்துகள்
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதில் “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள், இந்த விழா வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழுமையினை தரட்டும்” என்று ட்வீட் செய்திருக்கிறார் பிரதமர் மோடி.