இந்தியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
அதன்படி, டெல்லியில் விலக்கு அளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை தவிர பிற அனைத்து நிறுவனங்களையும் மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலு் வோர்க் ப்ரம் ஹோம் சிஸ்டத்தை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவானது டெல்லி ஆளுநர் அனில் பைஜல் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை எடுக்கப்பட்டது.
அதில், " டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கொரோனா பரவல் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக கொரோனா தொடர்ச்சியாக அதிகரிப்பதால், பாதிப்பு விகிதம் 23ஐ தாண்டியுள்ளது. எனவே, கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது வரை, டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காடு மக்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- தனியார் வங்கிகள்
- மருந்து சேவைகள், உணவகங்கள், தொலைத்தொடர்பு சேவைகள், சரக்கு போக்குவரத்து, விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அலுவலகங்கள்
- RBI ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள்
- வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
- குறு நிதி நிறுவனங்கள்
- வழக்கறிஞர்களின் அலுவலகங்கள்
- கோரியர் சேவைகள்
மேலும், உணவகங்களில் மக்கள் அமர்ந்து சாப்பிட பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil