”2ஜி அலைக்கற்றை முறைகேட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதே தவிர, முறைகேடே நடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை”, என, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கூறியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது எனக்கூறி, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் மற்றும் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, “2ஜி அலைக்கற்றை முறைகேட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதே தவிர, முறைகேடே நடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை”, என கருத்து தெரிவித்துள்ளார்.
“தீர்ப்பை முழுமையாக வாசிக்க வேண்டும். குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றுதான் நீதிமன்றம் கூறியுள்ளது”, என அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“குற்றவியல் சட்டத்தில் இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று, வழக்கே இல்லை என்பது. மற்றொன்று ஆதாரம் இல்லையென்பது. இந்த வழக்கில், ஆதாரங்கள்தான் இல்லை. ஒருவர் ஒரு குற்றத்தை செய்தாலும், அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென்றால் அந்நபரை குற்றவாளி என கூற இயலாது”, என கூறியுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்த காலகட்டத்தில் செப்டம்பர் 2007 முதல் மார்ச் 2008 வரை ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை உரிமங்கள், ”தன்னிச்சையானது, பொதுநலனுக்கு எதிரானது, சில நிறுவனங்களுக்கு மட்டும் ஆதாயம் தரும் நோக்கில் வழங்கப்பட்டது” எனக்கூறி, நீதிபதி சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.