/indian-express-tamil/media/media_files/2025/09/20/public-debt-cag-report-2025-09-20-13-26-15.jpg)
Exclusive: India’s 28 states’ debt balloons to Rs 59.6 lakh crore, trebled in 10 years: CAG Report
இந்தியாவின் 28 மாநிலங்களும் கடந்த பத்தாண்டுகளில் தங்களது கடன் சுமையை மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரான (CAG) கே. சஞ்சய் மூர்த்தி, மாநிலங்களின் நிதிநிலை குறித்த பத்தாண்டுகால ஆய்வு அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இந்த அறிக்கை, மாநிலங்களின் நிதி ஆரோக்கியம் குறித்த பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
கடன் சுமை அதிகரிப்பு
2013-14 நிதியாண்டில் மாநிலங்களின் மொத்த பொதுக் கடன் ₹17.57 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2022-23 நிதியாண்டில் இது ₹59.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 3.39 மடங்கு அதிகரிப்பு. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) உடன் ஒப்பிடுகையில், இந்தக் கடன் 16.66% இல் இருந்து 22.96% ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களின் பொதுக் கடனில், வெளிச்சந்தையில் இருந்து திரட்டப்படும் கடன்கள், வங்கிகளிடமிருந்து பெறப்படும் கடன்கள், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்படும் 'வேஸ் அண்ட் மீன்ஸ் அட்வான்ஸ்' (WMA) மற்றும் எல்.ஐ.சி, நபார்ட் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் அனைத்தும் அடங்கும்.
கடன் - மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம்: உச்சத்தில் யார்?
2022-23 நிதியாண்டின் இறுதியில், மாநிலங்களின் கடன்-ஜிஎஸ்டிபி விகிதத்தில் பஞ்சாப் (40.35%), நாகாலாந்து (37.15%), மற்றும் மேற்கு வங்கம் (33.70%) ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. அதேசமயம், ஒடிசா (8.45%), மகாராஷ்டிரா (14.64%) மற்றும் குஜராத் (16.37%) ஆகிய மாநிலங்கள் குறைந்த கடன் விகிதத்தைக் கொண்டுள்ளன.
2023 மார்ச் 31 நிலவரப்படி, எட்டு மாநிலங்கள் தங்களது ஜிஎஸ்டிபி -யில் 30% க்கும் அதிகமாகவும், ஆறு மாநிலங்கள் 20% க்கும் குறைவாகவும், மற்ற 14 மாநிலங்கள் 20% முதல் 30% வரையிலும் கடன் சுமையைக் கொண்டுள்ளன.
கடன் வாங்குவது எதற்காக?
"கடன் வாங்குவதற்கான பொன்னான விதி" ஒன்று உண்டு. அதாவது, அரசு தனது மூலதனச் செலவினங்களுக்காக மட்டுமே கடன் வாங்க வேண்டும், அன்றாட நிர்வாகச் செலவுகளுக்காக அல்ல. ஆனால், இந்த விதி பல மாநிலங்களால் மீறப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் என மொத்தம் 11 மாநிலங்கள், தாங்கள் வாங்கிய கடனை மூலதனச் செலவினங்களுக்குப் பதிலாக அன்றாட செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசமும் பஞ்சாபும் தங்களின் மொத்தக் கடனில் முறையே 17% மற்றும் 26% மட்டுமே மூலதனச் செலவுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளன. இது மிகவும் கவலையளிக்கும் ஒரு நிலை.
கொரோனா தாக்கம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டில் மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால், கடன்- ஜிஎஸ்டிபி விகிதம் 21% இல் இருந்து 25% ஆக உயர்ந்தது. மேலும், மத்திய அரசு, ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறைக்காகவும், மூலதனச் செலவினங்களுக்காகவும் மாநிலங்களுக்குக் கடன்களை வழங்கியதும் இந்த அதிகரிப்புக்கு ஒரு காரணம்.
மாநிலங்களின் கடன் சுமை என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல. இது ஒரு மாநிலத்தின் நிதி எதிர்காலம், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, ஆரோக்கியமான நிதி மேலாண்மைக்கு வழி வகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.