புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த 46 வயது தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் தன் மனைவியை பிரிந்து வாழ்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகநூலில், கனடா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை நபரும் அந்தப் பெண்ணிற்கு தன்னுடைய வீடு, கார், அலுவலகம் போன்றவற்றை படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
அந்தப் பெண்ணும் அவருடைய அலுவலகம், வீடு போன்றவற்றை அனுப்பிவைத்துள்ளார். அவர்களது பழக்கம் நெருக்கமாக அந்தப்பெண் தங்க செயின் வாட்ச், வாசனை திரவியங்கள் போன்றவற்றை பரிசாக அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார். தங்கச் செயின், கடிகாரம், வாசனை திரவியம் போன்ற அனைத்தையும் வீடியோவாகவும் போட்டோவும் எடுத்து லாஸ்பேட் நபரை அனுப்பி நம்ப வைத்துள்ளார். 6 நாட்களுக்கு பிறகு இந்தியா கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உங்களுக்கு பல லட்சக்கணக்கான மதிப்புடைய வாட்ச், தங்க செயின், வாசனை திரவியங்கள் வந்திருப்பதாக கூறி இறக்குமதி வரி, கஸ்டம்ஸ் டூட்டி கட்ட வேண்டும் என மர்மநபர்கள் கூறியதாக தெரிகிறது.
அதேபோல், பிரபல கொரியர் நிறுவனத்தில் இருந்தும் உங்களது பொருள் வந்துள்ளது. நீங்கள் கஸ்டம்ஸில் பணத்தை கட்டி கிளியரிங் செய்தால் மட்டுமே உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று கூறி நம்பவைத்து, பணம் கட்ட சொல்லியுள்ளனர். இதனை உண்மையென நம்பி 6 லட்சத்து 50,000 ரூபாய் பணத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்தி உள்ளார். 10 நாட்களாகியும் எந்த கொரியரும் வரவில்லை. மேலும், அவருடைய பெண் தோழியை தொடர்பு கொண்டபோது தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்ததால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக இணைய வழி காவல் நிலையத்தில் லாஸ்பேட்டை நபர் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்ற மோசடி வேலைகளில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர்கள் ஈடுபடுகின்றனர். இதேபோன்ற முறையில் கடந்த சில வருடங்களாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 நபர்களையும் கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பொதுமக்களுக்கு இணைவழி போலீசார் கூறும் எச்சரிக்கை: இணைய வழியில் வேலை வாய்ப்பு, குறைந்த விலையில் பொருட்கள் போன்ற எதையுமே நம்ப வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எந்த இணைய வழி சந்தேகமாக இருந்தாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பணம் செலுத்துவது போன்றவற்றை இந்திய அரசின் இலவச தொலைபேசி எண்ணான 1930 ஐ தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டு பணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.