காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
போராட்டத்தில் பங்கேற்ற மீனவ பெண்கள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், ஆதரவற்றுள்ள குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்திகளிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், சீன அரசுக்கு கை கூலியாக செயல்பட்டு வரும் இலங்கை அரசானது நம் நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதன் மூலம் நம் நாட்டின் மீது மறைமுக போரை உருவாக்குவதாக தெரிகிறது. இதற்கு இலங்கை மீது இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சமுதாய மீனவர்கள் இலங்கை அரசால் துப்பாக்கிச்சூட்டால் தாக்கப்படுவதும், அவர்களின் மீன்பிடி சாதனங்கள் முழுமையாக அழிக்கப்படுவதுமாக உள்ளது.
தமிழ் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றாலே பயத்துடன் அவர்கள் திரும்பும் சூழல் உள்ளது. தமிழகத்தில் எடப்பாடியார் அதிமுக ஆட்சியில் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. இலங்கை நாட்டின் வாலாட்டும் மத்திய அரசின் துணையோடு ஒட்ட நறுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் மத்திய பாஜக அரசுடன் கள்ள கூட்டணியில் இருந்தாலும் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படவில்லை.
பலநூறு தமிழக மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உள்ளனர். நேற்றைய தினம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கைது செய்துள்ளனர். அதில் 2 மீனவர்கள் ஆபத்தான நிலையிலும் 3 மீனவர்கள் சுமாரான காயத்துடனும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக முதலமைச்சர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இந்த கடிதத்தின் மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யப்பட வேண்டும். குண்டடிப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மீனவர்களையும் போர்க்கால அடிப்படையில் புதுச்சேரிக்கு கொண்டு வந்து அவர்களுக்கு உரிய உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
துணைநிலை ஆளுநர் அவர்கள் தேவைப்பட்டால் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி