தமிழக ஆளுநர் பதவியை தபால்காரர் பதவி போன்றது என்று விமர்சிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழக முதலமைச்சரின் தவறான செயல்களுக்கு துணைநிற்காத ஆளுநரை வாய்க்கு வந்தபடி வசைபாடுவதும், பொது நிகழ்ச்சிக்கு செல்லும் போது தனது கூட்டணி கட்சிகளை வைத்து கருப்பு கொடி காட்டுவதும், வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்வதும் ஏற்புடையது அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
எப்பொழுதும் உயர் பொறுப்பில் உள்ள யாராக இருந்தாலும் தனக்கு சமமான பதவியில் உள்ளவர்களையும், தனக்கு முன்பு முதலமைச்சர் பதவியில் இருந்தவரக்ளையும் தரம் தாழ்ந்து குறைத்தும், கேவலப்படுத்தி பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.
அ.தி.மு.க புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளுநர் அவர்களுக்கும், மத்திய அரசிடமும் மோதல் போக்கை கடைபிடித்து பிச்சனைகளை திசை திருப்பி வருகிறார். தமிழக முதல்வர்
தனது அமைச்சரவையில் குற்றவாளிகள், ஊழல்வாதிகள், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் உள்ளிட்டவர்களை அமைச்சர்களாக நீடிக்க அனுமதித்து கொண்டிருப்பது சட்டவிரோதத்தின் உச்சகட்டமாகும். தற்போது நீதிமன்றத்தின் நெருக்கடியால் வேறு வழி இல்லாமல் ஊழல் அமைச்சரையும், மத துவேஷம் செய்த அமைச்சரையும் பதவி நீக்கம் செய்துள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து இவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்தது என்பது போதுமானது அல்ல. இவர்கள் இருவரையும் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்கே தகுதி அற்றவர்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இவ்விருவர் மீதும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணக்கமான ஒரு சூழ்நிலை இருப்பதற்காக ஆளுநர் பதவிகளை அனுமதித்துள்ளது. தங்களுடைய சட்டவிரோத செயல்களை மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க கூடிய ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்வதும், மத்திய அரசையே கண்டித்து இயற்றப்படும் தீர்மானங்களை கூட ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பது ஏதேச்சகார செயலின் உச்சமாகும்.
தமிழக முதலமைச்சரின் தவறான செயல்களுக்கு துணைநிற்காத ஆளுநரை வாய்க்கு வந்தபடி வசைபாடுவதும், பொது நிகழ்ச்சிக்கு செல்லும் போது தனது கூட்டணி கட்சிகளை வைத்து கருப்பு கொடி காட்டுவதும், வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்வதும் ஏற்புடையது அல்ல. தற்போது கூட ஆளுநர் பதவி என்பது ஒரு தபால்காரர் பதவி போன்றது என தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். தபால்காரர் பணி என்பது பிறருடைய கடிதங்களை வீடு வீடாக சென்று சேர்ப்பதாகும்.
தற்போது தனது அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை சட்டத்திற்கு பயந்து பதவி நீக்கம் செய்துவிட்டு இன்று மாலை சில அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்காக்களும், புதியதாக ஒருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்குவதற்காக ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ல இருக்கின்றார்.
நேற்று வரை ஒரு ஆளுநர் பதவி என்பது தபால்காரர் பதவி என விமர்சனம் செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த தபால்காரர் பதவி வைத்துள்ள ஆளுநர் மூலம் தனது சகாக்கள் பதவியேற்க உள்ளதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்.
புதிய அமைச்சர்கள் நியமனம், சிலருக்கு இலாக்கா ஒதுக்கீடு போன்றவற்றை தபால்காரர் வேலை செய்யம் ஆளுநர் மூலம் பதவி பிரமாணம் செய்யாமல் அதற்கு மாற்றாக தனது கட்சியினுடைய பொதுச்செயலாளர் மூலம் புதியவர்களுக்கு முடிந்தால் அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
எப்பொழுதும் உயர் பொறுப்பில் உள்ள யாராக இருந்தாலும் தனக்கு சமமான பதவியில் உள்ளவர்களையும், தனக்கு முன்பு முதலமைச்சர் பதவியில் இருந்தவரக்ளையும் தரம் தாழ்ந்து குறைத்தும், கேவலப்படுத்தி பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி