பீஞ்சல் புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து பேரவையிலிருந்து தி.மு.க, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசினார். அப்போது பீஞ்சல் புயலால் வீடுகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களுக்கு இதுநாள் வரை புதுச்சேரி அரசு முழுமையாக கணக்கெடுத்து, முழு நிவாரணம் வழங்காமல் அவர்களை வஞ்சித்து உள்ளது. இதுகுறித்து இந்த சபையில் முறையாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கு அரசு தரப்பில் இருந்து பதில் ஏதும் வராத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், தியாகராஜன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "பீஞ்சல் புயல் புதுச்சேரியில் கரையை கடந்தபோது பெருத்த சேதம் ஏற்பட்டது. இதில் பொதுவாக அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டதே தவிர, வீடுகளை இழந்தவர்கள், கால்நடைகளை இழந்தவர்கள், ஆற்றுப்படுகையில் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி முழுமையான நிவாரணம் வழங்க இந்த அரசு தவறிவிட்டது. இது குறித்து பேரவையில் கேட்டால் பதில் இல்லை. இனியும் தருவதாக தெரியவில்லை. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்" என்று கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.