புதுச்சேரியில் சிறையில் இருந்து வெளியே வந்த உடன் வங்கி ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற பிரபல திருடனை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலமாக அடையாளம் கண்டு சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் நகர பகுதியில் உள்ள செயிண்ட் ஆக்னே வீதியில் உள்ள தனியார் வங்கியில் (ஆக்சிஸ்) உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த 17 ஆம் தேதி காலை அவரது ஸ்பெலண்டர் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து அதனை வங்கி அருகே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டு, மீண்டும் மாலை வீட்டுக்கு செல்ல அவரது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது வாகனம் மாயமாகி இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருகழுகுன்றம் பகுதியை சேர்ந்த பிரபல இருசக்கர வாகன திருடன் சாதிக் பாஷா (65) வண்டியை திருடியதும், திருட்டு வழக்கு ஒன்றில் இருந்து புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்தவர் மணிகண்டன் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை தேடி வந்த போலீசார் சென்னையில் அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சாதிக் பாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், காலாபட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி