/indian-express-tamil/media/media_files/2025/09/16/puducherry-bjp-resolution-2025-09-16-18-37-53.jpg)
ராகுல் காந்தியை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க. தீர்மானம்: பொதுக்குழுவில் நிறைவேறிய கண்டனங்கள்
புதுச்சேரி பா.ஜ.க. மாநிலப் பொதுக்குழு கூட்டம், மாநிலத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் பழைய துறைமுகப் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அர்ஜுன் ராம் மேகவால், மாநிலப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுராணா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ கணபதி, அமைச்சர் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவின் கண்டனத் தீர்மானங்கள்
வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்குக் கண்டனம்: வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி பயத்தால், லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் "வாக்கு திருட்டு" என்ற பொய்யான குற்றச்சாட்டைப் பரப்பி வருவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் இதேபோன்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதாகவும், ஆனால் அதனைத் தெரிவித்தவர் தனது தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இதே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, வாக்காளர்களையும் தேர்தல் ஊழியர்களையும் பிரதமர் மீதும் தவறாகப் பேசுகிறார்கள் என்று கண்டிக்கப்பட்டது.
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு கண்டனம்: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரை இழிவாகப் பேசிய ராகுல் காந்தியை வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒட்டுமொத்த நாட்டுப் பெண்களையும் இழிவாகப் பேசிய ராகுல் காந்தியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் கூறியது.
பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பொய் கூறியதற்கு கண்டனம்: காஷ்மீர் பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலையங்களை அழித்த "ஆப்ரேஷன் சிந்துர்" நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ராகுல் காந்தி கூட்டம் அமெரிக்காவின் வற்புறுத்தலால் தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று பொய்க் குற்றச்சாட்டை கூறி, நாட்டின் ராணுவ வீரர்களையும் பிரதமரையும் இழிவுபடுத்தியதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்த சட்டம்: ஊழல் வழக்கில் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் போன்றவர்களின் பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியா கூட்டணியினர் அவதூறாகப் பேசுவதையும் பொதுக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.