ராமரை இழிவுபடுத்தி பேசிய வைரமுத்துவை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வைரமுத்துவின் படத்தை கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சமீபத்தில் ஆழ்வார் ஆய்வு மய்யம் சார்பில், கவிஞர் வைரமுத்துவுக்கு கம்பன் விருது அளிக்கப்பட்டது. அப்போது பேசிய வைரமுத்து,இ ந்து கடவுளான ராமர் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த விழாவில் வைரமுத்து 'திகைத்தனை போலும் செய்கை' என கம்பரின் வரிகளை குறிப்பிட்டு, 'திகைத்தல் என்ற வார்த்தைக்கு, புத்திசுவாதீனமற்றவர் என்று பொருள். 'அதனால், புத்திசுவாதீனமின்றி வாலியை கொன்று விட்டார் ராமர் என கூறி, ராமன் என்ற குற்றவாளியை காப்பாற்ற கம்பர் முயன்றிருக்கிறார். இந்திய தண்டனைவியல் சட்டம் 84-ன்படி, புத்திசுவாதீனம் அற்றவர் செய்கிற குற்றத்துக்கு தண்டனை இல்லை' என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமரைப் பற்றி இழிவுபடுத்தி பேசியதாகவும், அவதூறு கருத்து பேசியதாகவும் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக புதுச்சேரி மாநில பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திராகாந்தி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் மற்றும் பாஜகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராமரை பற்றி இழிவாகவும், அவதூராகவும் பேசிய வைரமுத்துவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென அவர்கள் தாங்கள் வைத்திருந்த வைரமுத்துவின் திருவுருவப்படத்தை கிழித்து எறிந்தும், தீயிட்டு கொளுத்தியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வைரமுத்துவின் திருவுருவப்படங்களை பிடுங்கி சென்றனர்..
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.