புதுச்சேரி சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் பின்வருமாறு:
கென்னடி (திமுக): அரசு வாக்குறுதி அளித்தபடி மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க அரசு சார்பில் ஏதேனும் குழு அமைக்கப்பட்டுள்ளதா? இடம் தேர்வு செய்யப்பட்டதா?
அமைச்சர் திருமுருகன்: எந்த குழுவும் இதுவரை அரசால் அமைக்கப்படவில்லை.
கென்னடி: புதுவை தனி மாநிலமாக உருவாக குரல் கொடுத்தவர் எங்கள் தலைவர். அவருக்கு சிலை அமைக்க ஏன் கால தாமதம்? கிழக்கு கடற்கரை சாலையில் வரும் புதிய பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளீர்கள். மனசாட்சியோடு செயல்படுங்கள்.!
எதிர்கட்சித்தலைவர் சிவா: எந்த குழுவும் அமைக்கப்படவில்லை எனக் கூறலாமா? இது தவறான தகவல். இடம்கூட தேர்வு செய்தோம். யாருடைய சிலையை வைக்கவும், நாங்கள் எதிராக இல்லை. சிலை வைப்பது தொடர்பாக 5 முறை பதில் கூறிவிட்டீர்கள். ஆனால் சிலை அமைக்கவில்லை. இதில் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள்.
முதலமைச்சர் ரங்கசாமி: சிலை வைக்கக் கூடாது என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபட்ட, போற்றப்படும் தலைவர்களுக்கு சிலை அமைப்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் அளிக்கும் வகையில் ஏதாவது ஒரு இடத்திற்கு பெயர் சூட்டப்படும்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி