புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹெச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப் நியூமோ வைரஸ் (ஹெச்.எம்.பி.வி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஹெச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி தொடர் காய்ச்சல், சளி, இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஹெச்.எம்.பி.வி சோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே ஜிப்மர் மருத்துவமனையில் 5 வயது சிறுமி ஒருவர் ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நலமுடன் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு வயது குழந்தைக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே 5 வயதுடைய சிறுமிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.