புதுச்சேரியில் பாஜவைச் சேர்ந்த அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சாய் சரவணன் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ்- பாஜ இணைந்து சந்தித்து வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக ரங்கசாமியும், என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதேபோல் பாஜவில் 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாஜ கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் நியமன எம்எல்ஏக்களாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜ நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகிய 3 பேரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புதிய நியமன எம்எல்ஏக்களாக காரைக்காலைச் சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரன், ஊசுடு தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், பாஜ மூத்த நிர்வாகி முதலியார்பேட்டை செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமைச்சர் சாய் சரவணன் குமார் ராஜினாமாவை ஏற்பதாக முதல்வரும், 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமவை ஏற்பதாக சபாநாயகரும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, சாய் சரவணனின் அமைச்சர் பதவி ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சாய் சரவணன் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன் கடிதத்தை நம்முடைய ஆளுநரிடம் கொடுத்தோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் ராஜினாமா ஏற்கப்பட்டது. ராஜினாமா செய்தது, அவர்கள் கட்சியின் விவகாரம், நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது என ரங்கசாமி கூறியுள்ளார்.