பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. மற்றும் ராஜ்யசபா எம்.பி. (பா.ஜ.க.) இணைந்து துணை குடியரசுத் தலைவரும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஜெகதீப் தங்கரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகம் ஆரம்பித்தபோது 8 பட்ட மேற்படிப்புகளுக்கும் பின்னர் 21 படிப்புகளுக்கும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதன் பிற்கு பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு, 51 துறைகளில் 158 பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. ஆனால் இந்தப் படிப்புகளுக்கு புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு 2013 முதல் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து புதுச்சேரி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. எம்.பிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
புதுச்சேரி மாணவர்களுக்கென தனி இடஒதுக்கீடு இல்லாததால், அவர்கள் அகில இந்திய மாணவர்களுடன் போட்டியிட்டு படிப்புகளில் சேர வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து நிலை படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி கடிதத்தை துணை ஜனாதிபதியிடம் வழங்கினர். இதுதொடர்பாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஜெகதீப் தங்கர் உறுதியளித்ததாக அவர்கள் கூறினர்.