New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/20/Mb7HVxgQziCk7E4feQQr.jpeg)
மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினரும், மாநில காங்கிரஸ் தலைவருமான வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரி அரசு தீபாவளிக்கு இலவச அரிசியை ரேஷன் கடை மூலம் வழங்கியது. ஆனால் அதன் பின்னர் ரேஷன் கடைகளை திறக்கவில்லை. இலவச அரிசியை வழங்கவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளமும் தரவில்லை. உணவு பாதுகாப்பு சட்டப்படி 20 கிலோ அரிசி ஏழை மக்களுக்கு தர வேண்டும். இதையும் அரசு தரவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் விவசாயிகள், முழுமையாக வீடு இழந்தவர்களுக்கு இதுவரை நிவாரணம் தரவில்லை. மத்திய அரசு புயல் சேதத்தை பார்வையிட்டதோடு சரி, அவர்களும் நிவாரணம் தரவில்லை. மத்திய அரசை நாடி நிவாரணம் பெற புதுச்சேரி அரசு தவறிவிட்டது.
மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவோம். புதிதாக மது ஆலைகள் தேவையில்லை.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கை சரியாக இல்லை. இதில் ஆளும் கட்சியினர் தலையீடு உள்ளது. போலீசார் தாமதமாக செயல்படுகின்றனர். மாணவியிடம் அத்துமீறல் குறித்து முழு விசாரணை நடத்தி உரியவர்களை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம் நடத்தும். இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.