புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இந்திய அரசியலமைப்பைக் காப்போம் பிரச்சார விளக்க கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல். ஏ., உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம், பணமாக வழங்கும்போது ஒரு கிலோ 30 ரூபாய் என்று 10 கிலோ அரிசிக்கு மஞ்சள் அட்டைக்கு 300 ரூபாயும், புதுச்சேரியில் அரிசிக்கு பதில் பணமாக வழங்கும்போது சிவப்பு அட்டைக்கு 20 கிலோ அரிசிக்கு 600 ரூபாயும், மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு 300 ரூபாயும் வழங்கினார்கள். ஆனால் தற்போது 80 ரூபாய் போட்டு அரிசி வாங்குகிறார்கள்.
அப்படி என்றால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் வீதம் ரங்கசாமி கொள்ளையடித்திருக்கிறார். தற்போது நீங்கள் அரிசி வாங்குவதற்கு நீங்கள் மாற்றி போட்ட ஒரே ஒரு ஓட்டு தான் காரணம். தற்போது 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை யாராவது எடை வைத்து பார்த்ததுண்டா? என்று கேட்க, பெண்கள், 10 அரிசிக்கு பதிலாக ஒன்பதரை கிலோ மட்டுமே இருப்பதாகவும் கூறினார்கள்.
இதனை கேட்டுக் கொண்ட அவர் அப்படி என்றால் பத்து கிலோ அரிசிக்கு அரை கிலோ அரிசி கொள்ளை அடிக்கிறார்கள், அரை கிலோ அரிசியின் விலை ரூ40 இது எங்கே போகிறது? சாப்பாடு மட்டும் சாப்பிட்டால் போதுமா இட்லி சுட்டு சாப்பிடலாம் என்றால் உளுந்து விலை 180 ரூபாய் விற்கிறது, புளி குழம்பு வைத்து சாப்பிடலாம் என்றால் புளி 150 விற்கிறது . கறி குழம்பாவது சாப்பிடலாம் என்றால் பூண்டு விலை 500 ரூபாய் விற்கிறது, புளி வாங்கினால் ஒரு நாள் சம்பளம் அவுட்டு,பூண்டு வாங்கினால் நான்கு நாள் சம்பளம் அவுட்டு.
ரேஷன் கடைகளில் அரிசி மட்டுமே ரெங்கசாமி வழங்கி வருகிறார் இதனால், புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு சர்க்கரை வியாதி வர ரங்கசாமி தான் காரணம் என்று குறிப்பிட்ட அவர். அரிசியுடன் கோதுமை உளுந்து பருப்பு கேட்டால் பிராந்தி பாட்டிலை தான் வழங்குவார் ஏனென்றால் வீதிகள் தோறும் ரெஸ்ட்டோபாரை தான் அவர் திறந்து வைத்து வருகிறார். எனவே இந்த முறை ஒரு ஓட்டு மட்டும் அல்ல குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டையும் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி