/indian-express-tamil/media/media_files/2025/10/16/puducherry-contract-teacher-regularization-2025-10-16-19-10-32.jpg)
பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுச்சேரி சட்டமன்றம் அருகே 200 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி கல்வித் துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கௌரவ ஆசிரியர்கள், பால சேவிகா, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் மொழி ஆசிரியர்கள் ஆகியோரை நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிராகப் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாலகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டமன்றம் அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்தி, ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆசிரியர்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தித் தங்களை நிரந்தரம் செய்யக் கோரி, ஒப்பந்த ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதாகவும், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.