/indian-express-tamil/media/media_files/2025/06/13/59myfonzBOk8exCqvd0t.jpg)
புதுச்சேரி விலையில்லா ரேசன் அரிசி டெண்டரில் முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் நான்கு மாதத்திற்கு 20 கோடி வரை புதுவை அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு பட்டு வருகிறது என எதிர்கட்சித்தலைவர் (திமுக) இரா.சிவா இன்று பத்திரிகையாளரிடம் தெரிவித்தார் .
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில் பெரும் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இலவச அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்கு சாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து அதிகாரிகள் கொள்ளையடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக, உண்மையாக பயன்பெற வேண்டிய ஏழை விவசாயிகளும் உள்ளூர் அரிசி ஆலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுளனர். இந்த மோசடியால், புதுச்சேரி அரசின் மக்கள் நலன் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியிலுள்ள ஏழை எளிய விவசாயிகளின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 2024 ரேசனில் அரிசி வழங்கும் டெண்டரில் தனக்கு சாதகமான வடநாட்டு கம்பெனிக்கு ஆதரவாக அவர்கள் மட்டுமே பங்கு பெற்று தேர்வாகும் வகையில் டெண்டர் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கே டெண்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த எந்த மில்லும் இந்த டெண்டரில் கலந்து கொள்ளவில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.47.70 பைசா நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் நான்கு மாதங்களுக்கு அரிசி வழங்க நிர்ணயிக்கப்பட்டது.தற்போது மீண்டும் நான்கு மாதங்களுக்கு அரிசி வழங்கும் டெண்டர், அதே வடநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டித்து வழங்கி இருக்கிறது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த அரசு டென்டரின் கீழ் புதுச்சேரி விவசாயிகளோ புதுச்சேரி அரிசி ஆலைகளோ எந்தவித ஆதாயமும் பெறவில்லை. புதுச்சேரியில் இருந்து அரிசியோ, நெல்லோ, கொள்முதல் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் தற்போது ரேஷனில் வழங்கப்படும் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு புதுச்சேரியில் வழங்கப்படுகிறது. இதனால் புதுச்சேரிக்கு 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி, அரிசி விலை குறைந்திருக்கும் சூழலில், போன ஒப்பந்தத்தின் போது, ஒரு கிலோவிற்கு ரூ.9/- கூடுதலாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதே ஒரு கிலோ அரிசிக்கு ரூ.15/- கூடுதலாக புதுச்சேரி அரசு வழங்கியுள்ளது. தற்போது டெண்டர் வழங்கப்பட்டு அரிசி விநியோகிக்கக்கூடிய வடநாட்டு கம்பெனிக்கு, புதுச்சேரியில் தனக்கென்று சொந்தமான அரிசி ஆலையோ, கொள்முதல் நிலையமோ எதுவுமே இல்லை.
அப்படி இருக்க புதுச்சேரியிலுள்ள விவசாயிகளை புறக்கணித்துவிட்டு வட மாநில கம்பெனிக்கு சிகப்பு கம்பளம் விரித்தது ஏன்? என்ற கேள்வியை முன்வைக்கிறேன்.
தற்போதுள்ள இந்த முறைகேடான டெண்டரை உடனே ரத்து செய்துவிட்டு, புதுச்சேரியின் சிறு குறு விவசாயிகள், அரிசி ஆலைகள் பயன்பெறும் வகையில், புதுச்சேரியிலுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து, டெண்டரில் கலந்து கொள்ள ஏதுவாக மாற்றியமைக்க வேண்டும். நலிவடைந்து வரும் விவசாயம் செழித்தோங்க புதுச்சேரி அரசு இலவச அரிசி வழங்கும் இந்த திட்டத்தில் நம் மண்ணின் மைந்தர்காள் பயன்பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்கை முடிவாக அதனை செயல்படுத்திட வேண்டும். தற்போது மஞ்சள் அட்டைக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசியை 15 கிலோவாக உயர்த்தித்தர வழிவகை செய்ய வேண்டும்.
புதுச்சேரி ரேஷன் அட்டைக்கு இரண்டு கிலோ கோதுமை வழங்கப்படுவதாக உறுதி அளித்த நிலையில் தற்போது வரை அது வழங்கப்படவில்லை. அதனையும் உரிய முறையில் மக்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை வாடகை பிரச்சினைகள், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் போன்ற அனைத்து நிர்வாக ரீதியான பிரச்சினைகளையும் சரி செய்து ஏழை எளிய மக்கள் பயன்பெறக்கூடிய இந்த இலவச ரேஷன் அரிசி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த டெண்டர் முறையாக மீண்டும் செயல்படுத்தப்படவில்லை என்றால் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை முன்பு தேதியிட்டு நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.