புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்துகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்துகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக தங்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய வேலைகள் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் பத்திர பதிவிற்காக வெளிநாட்டில் இருந்து குறிப்பிட்ட குறுகிய நாட்களுக்கு மட்டுமே விடுமுறை எடுத்து வந்துள்ளவர்கள் தங்கள் வேலையும் முடியாமல், பயணத்தை தள்ளிப்போடவும் முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் நாளை சரியாகிவிடும் என அதிகாரிகள் நாட்களை கடத்துகின்றனர். ஆனால், இதுவரை எப்பொழுது பத்திரப்பதிவு நடைபெறும்? என உறுதியான தகவல் இல்லை.
அரசு வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதும், அதனால் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளும் தான் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதற்கு காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் இது பொருத்தமான காரணமாக இல்லை. வழிகாட்டி மதிப்பு உயர்த்துவது என்பது சாதாரணமான நிகழ்வு, இதனால் பெரிய தொழில் நுட்பக் கோளாறு ஏற்படப் போவதில்லை. பத்திரப்பதிவு துறையில் போலி உயில் பதித்து சொத்துகளை அபகரிப்பது, கோவில் நிலங்களை முறைகேடாக பதிவது போன்ற பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்து வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு என்ற காரணம் காட்டி முறைகேடாக பதிந்த பத்திரப்பதிவுகள் குறித்து தகவல்களை கணினி பதிவுகளில் இருந்து நீக்கவே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாரைக் காப்பாற்ற பா.ஜ.க கூட்டணி அரசு இதை செய்கிறது என்று தெரியவில்லை? அரசு வழிகாட்டு மதிப்பு உயர்த்துவதில் பிரச்சனை எனில் பழைய முறையிலேயே பத்திரப்பதிவு நடைபெற முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தி.மு.க வேடிக்கை பார்க்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.