/indian-express-tamil/media/media_files/2025/10/05/puducherry-municipal-whatsapp-complaint-2025-10-05-18-34-27.jpg)
குப்பைகளை சேகரிக்காத நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம்: புதுச்சேரி உள்ளாட்சித் துறை அதிரடி
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த திடக்கழிவு மேலாண்மை நிறுவனமான 'கிரீன் வாரியர்' (Green Warrior) மீது புதுச்சேரி உள்ளாட்சி நிர்வாகத் துறை (LAD) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. குப்பைகளைச் சரியாக அப்புறப்படுத்தத் தவறியதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குப்பை சேகரிப்பு சேவைகளில் ஏற்பட்ட தொடர் தொந்தரவுகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, புதுச்சேரியில் திடக்கழிவு மேலாண்மையைச் சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகத் துறை இந்தத் தண்டனையுடன் கூடிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
குப்பைகளை முறையான முறையில் அகற்றத் தவறியது குறித்துப் பொதுமக்கள் அளித்த தொடர் புகார்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறை, புவி-குறியிடப்பட்ட (Geo-tagged) பொறிமுறை மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் உடனடியாக நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. புகார் அளித்த 60 நிமிடங்களுக்குள் சரிசெய்யாவிட்டால், ஒப்பந்த விதிமுறைகளின்படி, நாங்கள் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். இதன் அடிப்படையில், கடந்த மாதம் மட்டும் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்க, உள்ளாட்சி நிர்வாகத் துறை (LAD) தற்போது நகராட்சி அதிகாரிகள், கிரீன் வாரியர் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 2 பிரத்யேக வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி நகராட்சிக்கான வாட்ஸ்அப் எண்: 9118181911
உழவர்கரை நகராட்சிக்கான வாட்ஸ்அப் எண்: 9118383911
மேலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்துப் பொதுமக்களிடம் நேரடியாகக் கருத்து கேட்கும் ஒரு திட்டத்தையும் LAD விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக, புதுச்சேரியில் உள்ள சுமார் 120 குடியிருப்போர் சங்கங்களுடன் உள்ளாட்சித் துறை விரைவில் கலந்துரையாட உள்ளது. இந்த நிறுவனத்தின் சேவையை மேம்படுத்துவதற்காக, அதிக வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்துமாறு துறை அறிவுறுத்தியுள்ளது.
குப்பைகளை உடனுக்குடன் அகற்றாவிட்டால் நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார்கள் சென்ற நிலையில், அவரும் ஒரு பொது நிகழ்ச்சியில் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையில், தற்போதுள்ள திட்டத்தின் செயல்பாட்டை முழுமையாக மதிப்பீடு செய்ய, ஒரு சுயாதீன கண்காணிப்புக் குழுவை நியமிப்பதற்கான டெண்டரையும் LAD வெளியிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் சுதந்திரமான மதிப்பீட்டாளராக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தை விரைவில் நியமிக்க உள்ளதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us