/indian-express-tamil/media/media_files/2025/02/12/5qmKux8qrYjtTvzIZDlK.jpg)
பள்ளியில் மாணவர்கள் கை கழுவும் இடத்தின் அருகே இருந்த மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மணவெளி தொகுதிக்கு உட்பட்ட புதுக்குப்பம் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது.1 முதல் 5 வகுப்பு வரை உள்ள பள்ளியில் 100-கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதனால், மாணவர்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளதாகவும், உடனடியாக பள்ளியை புணரமைக்க வேண்டும் என ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் மாணவர்கள் கை கழுவும் இடத்தின் அருகே இருந்த மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.