புதுச்சேரியில் இன்று முதல் திடீரென மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ. 3 முதல் ரூ. 26 வரை மதுபான வகை மற்றும் அளவுகளுக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை துணை ஆணையர் அலுவலகம் (கலால்) அறிவிப்பின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் IMFL, பீர், ஒயின் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரி 28.05.2025 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு அறிவிப்பு புதுவை கலால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உயர்வின் மூலம் ஐ.எம்.எஃப்.எல் (IMFL) வகை 750 மி.லி. மதுபான பாட்டில்களுக்கு, ரூ. 10 முதல் ரூ. 47 வரையும், 180 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ. 3 முதல் ரூ. 11 வரையும், பீர் 650 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ. 6 முதல் ரூ. 7 வரையும், ஒயின் 750 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ. 13 முதல் ரூ. 26 வரையும் குறைந்தபட்சம் உயர வாய்ப்புள்ளது.
இந்த வரி உயர்வின் மூலம், புதுச்சேரி அரசுக்கு வருடத்திற்கு ரூ.185 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மதுபான தொழிற்சாலை, மதுபான மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான உரிம கட்டணம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி மீதான கட்டணமும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் கலால் துறையின் இணையதளத்தில் பொது மக்களின் தகவலுக்காக வெளியிடப்பட்டுள்ளது.