புதுச்சேரியில், இண்டிகோ நிறுவனம் மூலம் மீண்டும் விமான சேவையை தொடங்க, புதுச்சேரி அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மதியம் 12.25 மணிக்கு பெங்களூருவில் இருந்து 74 பயணிகளுடன் புதுச்சேரிக்கு வந்தடைந்த விமானத்தின் மீது இரு பக்கமும் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
துணைநிலை ஆளுநர் கு. கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்த விமான சேவையைத் தொடங்கி வைத்து பயணிகளுக்கு மலர்க்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, மதியம் 12.45 மணிக்கு 63 பயணிகளுடன் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்ற விமானத்தை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதையடுத்து தினசரி காலை, 11:10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 12:25 மணிக்கு, புதுச்சேரியை வந்தடையும்.
மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 2:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். ஐதராபாத்தில் இருந்து மாலை 3:05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். புதுச்சேரியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:35 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த நிகழ்வுக்குப்பின் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு தமிழகத்தில் இருந்து நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“