/indian-express-tamil/media/media_files/2025/06/16/EEsLgW7XVZXH2LD2Qbth.jpeg)
Puducherry
புதுச்சேரி நகரப் பகுதியில் அமைந்துள்ள ஜெயராணி பள்ளி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் ஒரு முக்கிய கல்வி நிறுவனமாகும். இப்பள்ளியில் தற்போது 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் இப்பள்ளி இயங்காது என்ற அறிவிப்பு காரணமாக, நடப்பு ஆண்டில் புதிய சேர்க்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
பள்ளியின் இந்த திடீர் முடிவு, மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் பெரும் குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பிற்கு வேறு ஒரு பள்ளியில் சேருமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு பெரிய தடையாக பார்க்கப்படுகிறது.
பள்ளியின் இந்த முடிவை கண்டிக்கும் விதமாக, மாணவ மாணவியர்களும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து இன்று காலை முதல் பள்ளியின் எதிரே உள்ள புஸ்ஸி வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதேவேளையில், புதுச்சேரிக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதிக்காக நகர முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று மதியம் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜெயராணி பள்ளியில் இன்று காலை 8:30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் துவங்கியது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தின் மூலம், ஜெயராணி பள்ளி மூடப்படுவதற்கான காரணங்கள் குறித்தும், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.