புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததால் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடர வேண்டுமா? என முதல்வர் ரங்கசாமி தான் முடிவு செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சிவா தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா. சிவா தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ந. ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநில அந்தஸ்து தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் மாநில அந்தஸ்து தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு துணைநிலை ஆளுநர் மூலம் விரைந்து அனுப்ப வலியுறுத்திய அவர்கள், மாநில அந்தஸ்து தொடர்பாக செயற்கை நுண்ணறிவு என்ன சொல்கிறது? எனக் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, "மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் முதல்வர் ரங்கசாமி பா.ஜ.க-வுடன் கூட்டணியில் சேர்ந்தார். ஆனால், ஆட்சி முடியும் தருவாயிலும் மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. இனியும் பா.ஜ.க.வுடன் தொடர வேண்டுமா? என முதலமைச்சர் ரங்கசாமி தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இந்த சந்திப்பின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், வேலவன், தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.