புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி சட்டப்பேரவை செயலர் தயாளனிடம் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு இன்று கடிதம் அளித்தார். இது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பொது கணக்கு குழுவில் இருந்து நேரு நீக்கப்பட்டதால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடிதம் கொடுத்துள்ளார் என்றும், அவரை தான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்
இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் செல்வம், "பொது கணக்கு குழுவில் இருந்து நேரு எம்.எல்.ஏ நீக்கப்பட்டதால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடிதம் கொடுத்துள்ளார். அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
சட்ட விதிகளுக்கு உட்பட்டே அரசு விழாக்கள் மற்றும் தனிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்கிறேன். முதல்வர் அழைப்பதாலேயே தான் அவரது அலுவலகம் சென்றேன். எனது கைபேசியை பாருங்கள். இப்போது கூட எனக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து சட்டப்பேரவை கூடும் போது பேரவை முன் வைக்கப்பட்டு தீர்வு காணப்படும். அவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்து கொள்கிறார். நேரு எம்எல்ஏ மனு கொடுத்தது அவரது உரிமை. அதை அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வைக்கப்படும். எனக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேரட்டும். அப்போது பார்க்கலாம்." என்று அவர் சவால் விடுத்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“