இது குறித்து உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு கூறுகையில், புதுச்சேரி விடுதலை பெற்று 60 ஆண்டுக் கடந்து விட்டன. அதில் 50 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியும், 10 ஆண்டுகள் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர். விடுதலைக்கு முன்பு பிரெஞ்சு நாட்டுடன் செல்வ செழிப்புடன் இருந்து வந்த புதுச்சேரி தெரிந்தோ தெரியாமலோ நம் முன்னோர்கள் பிரெஞ்சு அரசிடம் இருந்து விடுதலைக் கேட்டு இந்திய நாட்டுடன் விரும்பி இணைந்து கொண்டது. இதன் விளைவு நாம் இன்று பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.
புதுச்சேரியில் அன்று இருந்த பிரெஞ்சு அரசு உருவாக்ககிய கட்டமைப்புகள்தான் இன்று வரை உள்ளன. புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த பிறகு எந்த விதமான வளர்ச்சியும் அடையாமல் உள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள பல மாநிலங்களுக்கு விடுதலைக்குப்பின் இந்திய அரசு மாநில அந்தஸ்து அளித்துள்ளனர். ஆனால் பிரெஞ்சு - இந்திய ஒப்பந்த அடிப்படையில் அனைத்து தனி தகுதிகளுடன் இணைந்த புதுச்சேரிக்கு மட்டும் மாநில அந்தஸ்து வழங்காமல புறக்கணித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த திருமதி. சுஸ்மா சுவராஜ் அவர்கள் மாநில அந்தஸ்து கொடுப்பதற்கான அனைத்து தகுதிகளும் புதுச்சேரிக்கு உள்ளது என்பதை விளக்கமாக கூறி அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அளித்தார். ஆனால் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி பாஜக அரசாக இருந்தாலும் சரி மாநில அந்தஸ்து கொடுக்காமல் புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மேலும் புதுச்சேரியை நிதிக் குழுவில் சேர்க்கவில்லை, கடனைத் தள்ளுபடி செய்யவில்லை தேவையான நிதி அளிப்பதில்லை.
ஒரு காலத்தில் 80 சதவீதம் மானியம் வழங்கிய மத்திய அரசு தற்போது 20 சதவீதத்திற்கு கீழ் வழங்கி அதிலேயே மாநிலத்திற்கான கடன்களின் வட்டியை பிடித்தம் செய்து கொள்கிறது. இப்படி மத்திய அரசு தொடர்ந்து நம் புதுச்சேரியை வஞ்சித்து வருகிறது. இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாநில மக்களை நேசிக்கக் கூடிய மாநில கட்சியின் தலைவராக ந.ரங்கசாமி இருந்து வந்தார்.
இன்று அவர் முழுக்க முழுக்க பாஜகவின் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளார். இன்று அவர் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் பரிதவித்து வருகிறார். பாஜகவுடன் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற உடனேயே இரவோடு இரவாக ஏனாம் தொகுதியில் திரு. ந.ரங்கசாமி அவர்களைத் தோற்கடித்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரை கட்சியில் சேர்த்து கூட்டணிக் கட்சிக்கு துரோகம் இழைத்தது பாஜக கட்சி.
அதுமட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சியாக இருக்கும் முதலமைச்சரை மதிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக கட்சியே நியமித்தது. மேலும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அபகரித்தது பாஜக கட்சி. இப்போது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் தேர்தலிலும் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவிடாமல் பாஜக கட்சி வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற்றுள்ளது. இப்படி மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் முதலமைச்சரை அடிமையாக்கி வைத்திருப்பதை மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன் அடிப்படையில் நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோணத்தில் பொதுநல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து பொதுநல அமைப்புகளின் கருத்துகளும் கவனமாக கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“