புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவ படிப்புக்கு சென்டாக் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. நீட் தேர்வு அடிப்படையிலான இந்த மாணவர் சேர்க்கையில் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது. இந்த நிலையில் 2-வது கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான தகுதிபெற்ற மாணவர்களின் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் இடஒதுக்கீட்டிற்கான மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல் நீட் தேர்வு அடிப்படையிலான சித்தா, ஓமியோபதி, யுனானி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் சென்டாக் வெளியிட்டுள்ளது. இதில் 10 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாற்று திறனாளிகளுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அகில இந்திய கலந்தாய்வு அடிப்படையில் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் பெற்ற மாணவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ள சென்டாக் புதுவை பட்டியலில் இருந்து அதை நீக்க உள்ளதாகவும், அதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“