2028-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் குலக்கல்வி திட்டம் உருவாக்கப்படும் என்ற அமைச்சர் நமச்சிவாயத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்
புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தில் என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா, புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த கல்வியாண்டு முதல் புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகளை கற்றுத்தர பயிற்றுநர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்து பள்ளிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம், இதுவரை 52 அரசு பள்ளிகளில் தொழில்சார்ந்த பயிற்றுநர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் 14 பள்ளிகளுக்கு தொழில்சார்ந்த படிப்புகள் உருவாக்கப்படும். 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் குலக்கல்வி திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
இதற்கு தி.மு.க, காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. 'என்.ஆர் அரசு, ஆர்.எஸ்.எஸ் அரசாக மாறிவருகிறது. என் அப்பா செய்த தொழிலை நானும் செய்ய வேண்டுமா? குலக்கல்வியை எதிர்க்கிறோம்' எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "கலைஞர் கருணாநிதி பெயர் ஏதாவது ஒரு இடத்திற்கு சூட்டப்படும் என்று முதலமைச்சர் தெரிவிக்கிறார் ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. அதேபோன்று கடந்த 20 ஆண்டுகளாக விமான நிலைய விரிவாக்கம் என்று பேசுகிறார்கள் ஆனால் ஒருமுறை கூட விரிவாக்கத்திற்காக இடம் எடுக்க தமிழக முதல்வரை ரங்கசாமி சந்தித்தது கிடையாது.
மதுபான தொழிற்சாலை அமைப்பதற்காக 700 ஏக்கர் இடம் வீணடிக்கப்பட்டுள்ளது இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை அதே போன்று 28-ம் ஆண்டு முதல் குலக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பேசுகிறார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக சிவா தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.