புதுச்சேரியில் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமி காணாமல் போனதாக அறியப்பட்ட விவகாரத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த சிறுமி, கடந்த மாதம் 27-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரோந்து பணியில் இருந்த போலீசார், நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி கடற்கரை அருகேயிருந்து சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமி கடும் சோர்வாக காணப்பட்டதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை செய்ததில், தன்னை ஆட்டோவில் ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியாதாகவும், அதனடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் காஜா மொய்தீன், புதுச்சேரியைச் சுற்றிக் காட்டுவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று மது கொடுத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. மேலும், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற காஜா மொய்தீன், சிறுவன் வழிதவறி வந்து விட்டதாக தனது மனைவியிடம் கூறி, தங்க வைத்துள்ளார். அச்சிறுமி முடி வெட்டியிருந்ததால், காஜா மொய்தீனின் மனைவி, சிறுவன் என நம்பியுள்ளார். மேலும், தனது மனைவி தூங்கிய பின்னர், சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர், சிறுமியை அதிகாலை நேரத்தில் வேறு ஒரு விடுதி வாசலில் விட்டுச் சென்றுள்ளார்.
அந்த விடுதியில் இருந்த மூன்று பேர் சிறுமி மதுபோதையில் இருந்ததை அறிந்து, சிறுமியை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், சென்னைக்கு வரும் போது சிறுமியையும் தங்களுடன் அழைத்து வந்து மீண்டும் சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர். அதன் பிறகு, சிறுமியை வாடகை கார் பிடித்து தனியாக புதுச்சேரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் வாக்குமூலத்தின்படி விடுதி பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சென்னையைச் சேர்ந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.