/indian-express-tamil/media/media_files/2025/08/26/whatsapp-image-2025-08-26-12-15-46.jpeg)
Puducherry
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டுப் போராட்டக் குழு, 33 மாத நிலுவைத் தொகையைக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல கட்டப் போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. புதிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், ஆகஸ்ட் 13, 2025 முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும், ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்காமல் சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் ஊழியர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின் பேரில், துறை இயக்குநர் போராட்டக் குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆகஸ்ட் 14-க்குள் அரசாணை (G.O) வெளியிடப்படும் என்றும், அதிகபட்சமாக 18 அல்லது 19-க்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஆனால், உள்ளாட்சித் துறை நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டி வருகிறது. நிர்வாகத்தின் இந்த துரோகப் போக்கைக் கண்டித்து, 7-வது ஊதியக் குழுவின் 33 மாத நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒத்திவைக்கப்பட்ட உண்ணாவிரதத்தை காத்திருப்புப் போராட்டமாக ஊழியர்கள் மீண்டும் தொடங்கி உள்ளனர். அரசாணை வெளியாகும் வரை விடுப்பு எடுத்து இந்தப் போராட்டத்தில் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.