'மத்திய பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி விமர்சித்தால் மறுநாள் அவருக்கு முதல்வர் நாற்காலி இருக்காது என்பதால்தான் வரவேற்றுள்ளார்' என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், 'வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும். நான் கட்சியின் சாதாரண தொண்டன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கான திட்டங்கள் இல்லை. புதுச்சேரியை புறக்கணிக்கும் இந்தப் பட்ஜெட்டை விமர்சித்தால் பதவி பறிபோகும் என முதல்வர் பாராட்டியுள்ளார். மத்திய பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி விமர்சித்தால் மறுநாள் அவருக்கு முதல்வர் நாற்காலி இருக்காது என்பதால்தான் வரவேற்றுள்ளார்.
புதுச்சேரியில் பத்திரப்பதிவுத்துறை மட்டுமில்லை, அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டியதிலும் ஊழல் நடந்துள்ளது. வெளிப்படையாகவே லஞ்சம் கேட்கின்றனர். தற்போது ஊழல் ஆட்சி நடக்கிறது. ஊழல் மலிய முக்கியக்காரணம் முதல்வர், அமைச்சர்கள்தான். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கேட்கிறீர்கள். இதில் கட்சித் தலைமைதான் முடிவு எடுக்கும். நான் கட்சியின் சாதாரண தொண்டன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.