/indian-express-tamil/media/media_files/2025/08/17/puducherry-statehood-2025-08-17-14-55-05.jpg)
மாநில அந்தஸ்துதான் புதுச்சேரிக்கு முழு சுதந்திரம்: முதல்வர் ரங்கசாமி பேச்சு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் முழு சுதந்திரம் கிடைக்கும் என்று தியாகிகள் கவுரவிப்பு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார். சுதந்திர தினத்தை ஒட்டி புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், கம்பன் கலையரங்கத்தில் நேற்று தியாகிகள் கவுரவிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, தியாகிகளுக்கு இனிப்புகள், பரிசுகள் மற்றும் ஓய்வூதியத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். புதிதாக விண்ணப்பித்த 10 ஆயிரம் பேருக்கு அடுத்த மாதம் முதல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.12,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தியாகிகளுக்கு விரைவில் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மாநில அந்தஸ்து குறித்த தனது கருத்தை வலியுறுத்திய முதலமைச்சர், "புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நமக்கு முழு அதிகாரம் வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும், கவர்னரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையான சுதந்திரம் பெற்ற எண்ணம் வரும்" என்றார்.
மேலும், மாநில அந்தஸ்து கோரி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து வருவதாகவும், விரைவில் மக்களின் ஆதரவோடு மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு சார்பு செயலாளர் கிரண், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் சுரேஷ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.