புத்தாண்டை கொண்டாட கடந்த டிசம்பர் 31ம் தேதி புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால், நகரப் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், துணிக்கடைகள், மதுபான கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்த விற்பனை, ரெஸ்டோ பார் மற்றும் மதுபான கடைகள் என, மொத்தமாக 473 உள்ளது. இந்த மதுபான கடைகளில் 31ம் தேதி ஒரு நாள் மட்டும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் மது பானங்கள் விற்பனையாகின.
மேலும் புதுச்சேரி அமுதசுரபி நிறுவனத்திற்கு 15 மது பார்கள், கான்பெட் நிறுவனத்திற்கு காரைக்கால் உள்பட 9 மது பார்கள் உள்ளன. இதில், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் உள்ள அமுதசுரபி எலைட் மற்றும் கான்பெட் மொத்த மதுபான கடைகளில் மட்டும் 31ம் தேதி 12 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
மொத்தமாக இந்த நிறுவனங்களின் 24 பார்களில் 60 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் 8 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.