/indian-express-tamil/media/media_files/2025/04/05/EjBxEGaiToYpJysDuyGt.jpg)
புதுச்சேரி அடுத்த கோரிமேட்டில் ஓசி சிகரெட் கேட்டு, டீ கடை வியாபாரியை கத்தியால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த கோரிமேட்டில் ஓசி சிகரெட் கேட்டு, டீ கடை வியாபாரியை கத்தியால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சசிக்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (23 வயது). இவர் ஜிப்மர் மருத்துவமனை எதிரே டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் திலாஸ்பேட்டை, வீமன் நகரை சேர்ந்த சசிக்குமார் (24), குருமாம்பேட் ஆறுமுகம் கிருஷ்ணராஜ் (22) ஆகியோர் ஹரிஷ், கடைக்கு சென்று ஓசி-யில் சிகரெட் கேட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு, ஹரிஷ் பணம் கொடுக்காமல், முடியாது என கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த சசிக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஹரிஷின் முகத்தில் வெட்டியும், கிருஷ்ணராஜ் கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து, ஹரிஷின் தலையில் தாக்கியும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹரிஷ் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவர், அளித்த புகாரின் பேரில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.