கடைசி நிமிடத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி சென்டர் மாறி வந்ததால் மாணவி, மற்றும் மாணவி பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த லாஸ்பேட்டை ஸ்பெஷல் பிராஞ்ச் (தனி பிரிவு) பிரிவில் பணிபுரியும் ஏ.எஸ்.ஐ ஆறுமுகம் தனது இரண்டு சக்கர வாகனத்தில் உரிய தேர்வு மையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று மாணவி தேர்வு எழுத உதவினார். இதனால் மாணவியின் பெற்றோர்கள் ஏ.எஸ்.ஐ ஆறுமுகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
புதுச்சேரியில் லாஸ்பேட்டை பகுதியில் தாகூர் கலைக் கல்லூரி மற்றும் பெண்கள் இன்ஜினியரிங் கல்லூரி என இரண்டு இடங்களில் நீட் தேர்வு இன்று நடக்கிறது.
இதில் லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரியில் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் ஸ்பெஷல் பிரான்ச் ஏ.எஸ்.ஐ ஆக பணிபுரியும் ஆறுமுகம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது ஒரு மாணவி தனது பெற்றோர்களுடன் அந்த தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.
ஆனால், அந்த மாணவிக்கான சென்டர் இங்கு இல்லை. நீங்கள் தேர்வு எழுதும் இடம் இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெண்கள் இன்ஜினியரிங் கல்லூரி, அங்கு செல்ல வேண்டும் என அனுப்பி வைத்தனர். அந்த மாணவி வெளியூர் மாணவி என்பதால் வழி தெரியாமல் மாணவியும் பெற்றோர்களும் அழ ஆரம்பித்தனர்
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனி பிரிவு ஸ்பெஷல் பிரான்ச் ஆறுமுகம் தனது டூவீலரை ஸ்டார்ட் செய்து அந்த மாணவியை ஏற்றிக்கொண்டு பெண்கள் கல்லூரியில் அந்த மாணவி எழுதும் இடத்திற்கு அழைத்து சென்று அங்கு தேர்வு மையத்திற்கு உள்ளே அனுப்பி வைத்தார். இதை கண்ட பெற்றோர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது இது சமூக வலைத்தளங்களில் பரவி வாழ்த்து மழை பொழிகிறது.