New Update
/indian-express-tamil/media/media_files/oFJZ6pmtbnAvq8YSqCrH.jpg)
பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி, உண்மையான தகவல்களுடன் வந்த வாட்ஸ்அப் லிங்கை தொட்டு ரூ. 1.23 கோடியை இழந்த புதுச்சேரி தொழிலதிபர்; வழக்குப் பதிவு செய்து இணைய வழி போலீசார் விசாரணை
பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக வருமானம் பெற வேண்டுமா? பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்வது லாபம் வரும் பங்குகளை வாங்குவது எப்படி? என்று வந்த வாட்ஸ் அப் (whatsapp) லிங்கை கிளிக் செய்த புதுச்சேரி சேர்ந்த தொழிலதிபர் ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாட்ஸ் அப் (Whatsapp), ஃபேஸ்புக் (Facebook), டெலிகிராம் (Telegram) இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வருகின்ற லிங்கை பயன்படுத்தி வருகின்ற எந்த ஒரு முதலீடு வேலைவாய்ப்பு என எதிலும் பணத்தை செலுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு புதுச்சேரி இணைய வழி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் பொதுமக்கள் பலர் இந்த மோசடி வலையில் சிக்கி விடுகின்றனர்.
அந்தவகையில், புதுச்சேரி சேதராப்பட்டில் பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களை தயாரிக்கும் உரிமையாளருக்கு கடந்த மாதம் 13-ஆம் தேதி அவருடைய வாட்ஸ் அப் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது இப்போதைய சூழ்நிலையில் லாபகரமான பங்குகள் எது? எந்தெந்த நேரத்தில் பங்குகளை விற்றால் லாபம் அதிகம் கிடைக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் அந்த வாட்ஸ் அப் லிங்க் இடம்பெற்றிருந்தது.
மேலும் நீங்கள் இந்த வாட்ஸ் அப் லிங்கில் இணைந்து விட்டால் உங்களுக்கு அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படும் என்றும் இருந்தது. அதை நம்பிய தொழில் அதிபர் அந்த லிங்கில் இணைந்துள்ளார். அவருக்கு பங்குச்சந்தை பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தால் ஒரு சில நாட்களிலேயே அவர்கள் சொன்னதை நம்பியிருக்கின்றார். அவர்கள் சொன்ன அத்தனை செய்திகளும் பங்குச்சந்தையை பற்றி உண்மையாகவே இருந்துள்ளது.
மேலும் அவர்கள் கொடுத்த லிங்கிலேயே பணத்தை முதலீடு செய்ய சொல்லி இருக்கின்றனர். அவர் பணத்தை முதலீடு செய்த போதெல்லாம் அவருடைய தனிப்பட்ட கணக்கில் பணம் இருப்பது போன்று காட்டியுள்ளது. சிறிது சிறிதாக நான்கு நாட்களில் 20 லட்ச ரூபாய் முதலீடு செய்த போது அவருடைய தனிப்பட்ட கணக்கில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் இருப்பது போன்ற காட்டியுள்ளது. அதை நம்பிய தொழிலதிபர் கடந்த 10 நாட்களில் ஒரு கோடியே 23 லட்ச ரூபாய் முதலீடு செய்து விட்டார். இப்போது அவருடைய கணக்கில் 6 கோடியே 20 லட்சம் பணம் இருப்பது போல் காட்டியதால் அதை எடுக்க முயற்சிக்கையில் மேற்சொன்ன அவருடைய தனிப்பட்ட கணக்கில் காட்டிய பணத்தை எடுக்க முடியவில்லை.
ஜி.எஸ்.டி கட்டுங்கள், வருமான வரி கட்டுங்கள் என்று பல்வேறு வகைகளில் பணத்தைக் கேட்கவே இது போலியானதாக இருக்குமோ என்று பயந்த தொழிலதிபர் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இணைய வழி மோசடிக்காரர்கள் உருவாக்கிய போலியான பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்துள்ளீர்கள் என்று தொழிலதிபரிடம் கூறிய இணையவழி போலீசார் மேற்கண்ட வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.