/indian-express-tamil/media/media_files/2025/08/23/puducherry-restobar-murder-congress-petitions-governor-to-transfer-case-to-cbi-tamil-news-2025-08-23-18-53-08.jpg)
புதுச்சேரி ரெஸ்ட்டோ பார் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்திரவிடக் கோரி காங்கிரஸ் கட்சியினர் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
சென்னை தனியார் கல்லூரியில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் என்கிற வாலிபர், தனது பிறந்தநாளை கொண்டாட புதுச்சேரி வந்துள்ளார். அப்போது அவர் தமிழகத்தை சேர்ந்த வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த தன்னுடன் இளநிலை கல்லூரி, பள்ளியில் படித்தவர்கள் என 15-க்கும் மேற்பட்டோரை விருந்துக்கு அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் அனைவரும் புதுச்சேரி வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள மது மற்றும் நடனத்துடன் கூடிய ஓ.எம்.ஜி (oh my gulp) என்கிற ரெஸ்டோ பாருக்கு அழைத்து சென்று அங்கு மது விருந்து அளித்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள்ளே சண்டை ஏற்பட்டு ஒருவருக்குகொருவர் வாக்கு வாதம் செய்ததால் அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அவர்களை வெளியே அனுப்புமாறு நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த பவுன்சர்கள் மற்றும் ரெஸ்டோ பார் ஊழியர்கள் அவர்களை பாரில் இருந்து சுமார் 12:30 மணியளவில் வெளியேற்றி உள்ளனர். ஆத்திரமடைந்த வாலிபர்கள் தங்களை ஏன் வெளியேற்றுனீர்கள் என பவுன்சர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு, சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த பார் ஊழியர் அசோக்ராஜ் என்பவர், நள்ளிரவு 1:30 மணியளவில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்துகொண்டு பாரின் கீழே இருந்த சண்முகப்பிரியனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். இதனை தட்டி கேட்ட ஷாஜினையும் இடுப்பில் அசோக்ராஜ் கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முகபிரியன் உயிரழ்ந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த கொலையில் தொடர்புடையதாக அசோக்ராஜ், பவுன்சர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரெஸ்ட்டோ பார் கொலை சம்பவத்துக்கு அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், ரெஸ்ட்டோ பார் கொலை வழக்கில் புதுச்சேரி போலீசாரின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்திரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை காங்கிரஸ் கட்சியினர் துணைநிலை ஆளுநரிடம் வழங்கி உள்ளனர்.
இன்று சனிக்கிழமை புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது கோயில்கள், மசூதிகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அருகே இருக்கும் ரெஸ்ட்டோ பார்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெஸ்டோ பாரில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் கொலை வழக்கு புதுச்சேரி போலீசாரின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் அவ்வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்திரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணைநிலை ஆளுநரிடம் வழங்கினர். மேலும், இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றம் செல்ல உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.