/indian-express-tamil/media/media_files/2025/09/09/puducherry-road-closures-2025-09-09-11-16-48.jpg)
புதுச்சேரி ரயில்வே மேம்பாலப் பணி: ரோடியர் மில் ரயில்வே கேட் மூடல்
புதுச்சேரியில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளுக்காக, ரோடியர் மில் ரயில்வே கேட் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
மேம்பாலப் பணிகள்
புதுச்சேரி-கடலூர் சாலையில் ரோடியர் மில் ரயில்வே கேட் பகுதியில் ரூ. 72 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பாலத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்காகவே ரயில்வே கேட்டை மூடி, போக்குவரத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றங்கள்
வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் முதல் ஆலை வீதி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் 80 அடி சாலை வழியாகத் திருப்பி விடப்படும். கடலூரில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆலை ரோடு வழியாகச் சென்று புவன்கரே வீதியில் வலதுபுறம் திரும்பி, காராமணிக்குப்பம் வழியாக நெல்லித்தோப்பு செல்ல வேண்டும்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் திரும்பி, நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சிலை வழியாக 100 அடி சாலை, மரப்பாலம் வழியாகக் கடலூர் சாலையில் செல்ல வேண்டும்.
நீதிமன்றம் மற்றும் வனத்துறைக்கு வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். போக்குவரத்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆகியோர் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.