புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டு இதில் +2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினார். அதன்படி தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று புதுச்சேரியில் தேர்ச்சி முடிவுகள் வெளியானது.
கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுதேர்வுகள் நடந்தது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 101 தனியார் பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 881 மாணவர்கள், 3 ஆயிரத்து 683 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 564 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 3 ஆயிரத்து 794 மாணவர்கள், 3 ஆயிரத்து 659 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 453 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி 98.53% ஆகும். புதுச்சேரி செயின்ட் ஜோசப் ஆஃப் க்ளூனி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநிலத்தில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்து உள்ளனர்
புதுச்சேரி செயின்ட் ஜோசப் ஆஃப் க்ளூனி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜா, 600-க்கு 597 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். பிரெஞ்சு, கம்ஃப்யூட்டர், வணிக கணக்கு, பொருளாதாரம் ஆகிய 5 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ள பூஜா, பி.காம் படித்து எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். பணியில் சேருவதே லட்சியம் என்றார். கடந்த ஆண்டு, 11-ம் வகுப்பில் இதே மாணவிதான் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு நேரத்தில் செல்போனை படிப்பிற்கு மட்டுமே பார்க்க வேண்டும் என மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார்.
இவரது தந்தை முத்துகுமரன், ஓட்டுநரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். இவரது தாயார்
சரஸ்வதி, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
புதுச்சேரியில் 51 பள்ளிகள், காரைக்காலில் 12 பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் 1, பிரெஞ்சு 75, இயற்பியல் 5, வேதியியல் 23, உயிரியல் 5, கணிப்பொறி அறிவியல் 253, கணிதம் 28, விலங்கியல் 1, தாவரவியல் 2, பொருளியல் 12, வணிக வியல் 16, கணக்குபதிவியல் 29, வணிக கணிதம் 9, கணிப்பொறி பயன்பாடு 122, வரலாறு 1 என மொத்தம் 582 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.