புதுச்சேரி, பாகூர் நகர், தனது விரிவடைந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில் குடியிருப்புகளில் பெருமளவு வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு இணையாகவே, வீதிகளில் இரவும் பகலும் கட்டுப்பாடின்றி அலைந்து திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையும், அவற்றின் ஆபத்துகளும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளன. இந்நிலை, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து, அச்சுறுத்தி வருகிறது.
தெருநாய்கள், ஏதும் அறியாத குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பாகூருக்கு வருபவர்கள் என்று எவரையும் பாகுபாடின்றி துரத்திச் சென்று கடிக்கும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி, அவர்களை விபத்துகளுக்கு உள்ளாக்கும் கலவரங்களும் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சொறிபிடித்த, வெறிபிடித்த நாய்களின் நடமாட்டம் சுகாதாரச் சீர்கேட்டிற்கும், மன உளைச்சலுக்கும் காரணமாக அமைகிறது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள், பாகூர் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/4zYApeLuKTcb38wBSEbB.jpeg)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பாகூர் நகரில் நிலவும் இந்த அத்தியாவசியப் பிரச்சனையைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரும் கடமையுடன், மக்கள் நலன் கருதி ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (02.06.2025) அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் நகர வடக்கு மற்றும் தெற்கு கிளைகள் சார்பில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், பாகூர் நகரத்தில் தெருக்களில் திரியும் நாய்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றின் தொல்லையில் இருந்து மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தெருநாய்களைப் பிடித்து, அவற்றுக்கு கருத்தடை செய்து, பாதுகாப்பான கொட்டகைகளில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது, நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், அவற்றின் அலைச்சலையும், அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் குறைக்கும் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாதம்.
/indian-express-tamil/media/media_files/2025/06/03/H2x3nQTT18DIt6nTVhow.jpeg)
இந்த மனு அளிக்கும் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் தெற்கு கிளை செயலாளர் முருகையன், வடக்கு கிளை செயலாளர் ஆனந்தராமன், மற்றும் கிளைத் தோழர்களான கல்கி, செல்வராஜ், முருகையன், வேலாயுதம், அஜித்குமார், செல்வி, விநாயகம், கமிட்டி உறுப்பினர் பக்தவாச்சலம் மற்றும் கொம்யூன் செயலாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.