/indian-express-tamil/media/media_files/2025/08/27/shivraj-chouhan-2025-08-27-13-04-38.jpg)
Shivraj Chouhan
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பண்டைய இந்தியாவில் தொழில்நுட்பம் எவ்வளவு மேம்பட்டிருந்தது என்பதைப் பற்றி சமீபத்தில் பேசிய கருத்துகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER Bhopal) 12வது பட்டமளிப்பு விழாவில் பேசுகையில், அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். “உலகம் அறியாமையின் இருளில் மூழ்கியிருந்தபோது, இந்தியா அறிவொளி தீபத்தை ஏற்றியது. நமது அறிவியலும், தொழில்நுட்பமும் மிக உயர்ந்த நிலையில் இருந்தன. ரைட் சகோதரர்கள் இல்லாத காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்தது.
அக்னி அஸ்திரம், வருண அஸ்திரம், பிரம்மாஸ்திரம் போன்ற ஆயுதங்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். மகாபாரதத்தில் இவை பயன்படுத்தப்பட்டன. இந்த ஆயுதங்கள் இலக்கைத் தாக்கிய பிறகு, மீண்டும் அதன் உறையிடத்திற்கே திரும்பி வரும் தன்மை கொண்டவை. இன்று ஏவுகணைகளும், ட்ரோன்களும் ஏவப்படும் நிலையில், நமது நாடு இதை எல்லாம் நீண்ட காலத்திற்கு முன்பே சாதித்திருக்கிறது.
நாம் அடிமைத்தனத்தின் பள்ளத்தில் விழுந்ததால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரிதாக வளரவில்லை. இந்தியா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மற்றும் சிறந்த தேசம். வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளில் நாகரிகத்தின் சூரியன் உதிக்காத போதே, நமது வேதங்களின் பாடல்கள் இயற்றப்பட்டு, உபநிடதங்கள் ஓதப்பட்டன,” என்று சவுகான் பெருமிதத்துடன் கூறினார்.
“உண்மை ஒன்றுதான், அதை ஞானிகள் வெவ்வேறு வழிகளில் விவரிக்கிறார்கள். நீங்கள் எந்த வழியில் சென்றாலும், அதே இலக்கைத்தான் அடைவீர்கள்” என்ற பண்டைய இந்தியக் கூற்றையும் அவர் மேற்கோள் காட்டி, நாம் நமது நாட்டைப் பற்றிப் பெருமை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.