இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தாரில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் கூறிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.
உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு கத்தாரின் முதன்மை நீதிமன்றம் கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது.
கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ்- இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இந்த 8 அதிகாரிகள் கத்தாரில் ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிறுவனம் கத்தார் ராணுவத்துக்கு சேவைகளை வழங்கி வந்தது.
மேலும், இந்த நிறுவனம் கத்தார் கடற்படை தொடர்புடைய நீர்மூழ்கி கப்பல் திட்டம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது.
ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கத்தார் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றம் உட்பட வழக்கின் பல விவரங்கள் இதுவரை பகிரங்கமாகத் தெரியவில்லை.
இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி கைதிகளுக்கு இந்தியா, தூதரக அணுகலைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பு ரகசியமாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் இது சட்டக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, எட்டு இந்தியர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மரண தண்டனை தீர்ப்பு வெளியான சில நாட்களுக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், எட்டு பேரின் குடும்பங்களை சந்தித்து, இந்த வழக்குக்கு அரசாங்கம் "அதிக முக்கியத்துவம்" அளிக்கிறது என்று உறுதியளித்தார்.
குடும்பங்களின் கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறேன், என்று கூறிய ஜெய்சங்கர், அவர்களை விடுவிக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அவர்களிடம் கூறினார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே, வெளியுறவு அமைச்சகம் இந்த வழக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது மற்றும் அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து வருவதாகக் கூறியது.
கடந்த 2022 ஆண்டு அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எட்டு முன்னாள் கடற்படை வீரர்கள் தனிமைச் சிறையில் இருந்து மாற்றப்பட்டு, ஒவ்வொரு அறைக்கும் இருவர் வீதம் தங்கள் சக ஊழியர்களுடன் சிறை வார்டில் வைக்கப்பட்டபோது அவர்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்தது.
இந்த ஆண்டு மார்ச் 25 அன்று, எட்டு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, மார்ச் 29 அன்று விசாரணை தொடங்கியது.
மே மாதம், தஹ்ரா குளோபல், தோஹாவில் அதன் செயல்பாடுகளை மூடியது. அனைத்து முன்னாள் ஊழியர்களும் (முதன்மையாக இந்தியர்கள்) பின்னர் தாயகம் திரும்பினர்.
இந்த வழக்கில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் தவிர, முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் ரமலான் மற்றும் ஈத் காலங்களில் மன்னிப்பு வழங்குவதாக அறியப்படும் கத்தார் எமீரிடம் கருணை மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Read in English: Qatar court accepts appeal against death penalty to 8 Indians
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“