Rafale Deal Issue Supreme court dismisses centre's objections : ரபேல் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக தி இந்து ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ரஃபேல் ஆவணங்கள் திருடு போனதாக, மத்திய அரசிடம் இருந்து பதில் வந்தது. மேலும் நிலுவையில் இருக்கும் ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், திருடப்பட்டு, சட்ட விரோதமாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது.
மேலும் தேசத்தின் பாதுகாப்பு விவகாரம் என்பதாலும், அதனை சட்டத்திற்கு புறம்பாக புகைப்படம் எடுத்து வெளியிட்டது, தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய அரசு சார்பில் இருந்து கூறப்பட்டது.
இந்நிலையில், ரஃபேல் விவகாரம் மீது, ஒருங்கிணைந்த பாராளுமன்றத்தின் கீழ், முன்னாள் நீதிபதி முன்னிலையில் விசாரணை வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ப்ரசாந்த் பூசன் வழக்கு தொடுத்திருந்தனர்.
அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், ரபேல் பேரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்றது, இம்மூவரும் மார்ச் 14ம் தேதி, சட்டவிரோதமாக மக்கள் மத்தியில் பரவிய ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு
ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு அதனை விசாரித்து, ரஃபேல் விவகாரத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சட்ட விரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக்கூடாது என்று மத்திய அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ரஞ்சன் கோகாய், எஸ்.கே. கவுல், மற்றும் கே.எம்.ஜோசப் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு ஒரு மனதாக தீர்ப்பு. மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.
மேலும் படிக்க : ரஃபேல் ஆவணங்கள் திருட்டு… என்ன சொல்கிறார் ‘தி இந்து’ ராம் ?