இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட் (HAL) நிறுவனத்துக்கு ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அரசு ஆர்டர்கள் கொடுத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும், அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
மேலும், விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாஜக அரசு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த வாரம் மக்களவையில் பேசிய ராகுல், "ரஃபேல் போர் விமான ஊழல் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல், எங்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவில்லாமல் தான் மோடி அவைக்கு வருவதில்லை. அஇஅதிமுக எம்.பி.க்களுக்கு பின்னால் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒளிந்து கொள்கிறார். மோடி தனது அறையில் ஒளிந்து கொள்கிறார்" என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அந்நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் கூட அளவுக்குக் கூட ஒப்பந்தம் வரவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு பொய் கூறினால், அதைத் தொடர்ந்து அந்த ஒரு பொய்யை மறைக்க, காப்பாற்றப் பல பொய்களைக் கூற வேண்டியது இருக்கும். பிரதமர் மோடியின் ரஃபேல் பொய்யை மறைக்க நிர்மலா ஆர்வமாக இருக்கிறார். அதனால், நாடாளுமன்றத்தில் நிர்மலா பொய் கூறியுள்ளார். நாளை நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.ஒரு லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.